Friday, May 21, 2010

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)

இந்தியாவை இஸ்லாம் ஆள வேண்டும்! பேரா. அப்துல்லாஹ் (பெரியார்தாசன்)
திங்கள், 17 மே 2010 00:16

"என்ன ... இப்புடி திடீர்னு ...?"
தன் நண்பர்கள் சிலரின் வினாவுக்கு அண்மையில் உரியவராகிப் போனவர்.
நாடறிந்த நாத்திகர்; நாவன்மை மிக்கவர்; படைத்த கடவுளைப் பாரெங்கும் சுற்றி மறுத்து நின்றவர்; தத்துவ இயல் கற்றவர்-கற்பிக்கின்ற பேராசிரியரா இவர்? என வியக்க வைக்கும் எளிய தோற்றம்; இனிய பேச்சு; பேச்சினூடே இயல்பாக இழையோடும் நகைச்சுவை - முனைவர் அப்துல்லாஹ் எனும் முன்னாள் பெரியார்தாசன்.

இவர் இஸ்லாத்தைத் தம் வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டதைப் பற்றி, பெரியார் திராவிடர் கழகத்தின் இணைய தளத்தில் கடந்த 01.04.2010 நாளிட்டு, ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. தலைப்பு : தோழர் பெரியார்தாசனின் கொள்கை மாற்றம்.அதே கட்டுரை, அதே தலைப்புடன் கீற்று இணைய இதழில் இருநாட்கள் கழித்து 03.04.2010இல் வெளிவந்திருந்தது.

அதில், "இப்போது பெரியார் சிந்தனைப் பள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, ஒரு மதவாதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், பெரியார் இயக்கத் தோழர்கள் சிலர் நம்முடைய பெரியார்தாசன், இப்படிப் போய் விட்டாரே என்று ஆதங்கப் பட்டார்கள். அவரது கடந்த கால வரலாறுகளை உன்னிப்பாகக் கவனித்தவர்களுக்கு, இதில் வியப்பு ஏதும் இருக்காது" என்று பழைய பெரியார்தாசனை 'உன்னிப்பாக'க் கவனித்து வந்த, 'பெரியாரிஸ்ட்' ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தவற்றுள், ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது. பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது. புத்த மார்க்கத்தில் போய் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது. 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியது. தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது. பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்டது. மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பது. ஆகிய ஏழு குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்பதற்கு ஒரு வாய்ப்புக் கிட்டியது.

கடந்த 07.05.2010இல் ஐக்கிய அரபு அமீரகங்களின் வணிகநகரான துபையில் நடைபெற்ற 'பன்னாட்டு இஸ்லாமிய இலக்கியக் கழக'த்தின் அமீரக்கிளை அறிமுக விழாவில் 'பெரியார்தாசன்' என்று அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் சிறப்புரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்ட அழைப்பு வடிவில் அந்த அரிய வாய்ப்பு வந்தது.
அந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஆட்சிமன்றக் குழுவின் துணைத் தலைவரும் அமீரகத் தமிழர்களின் அன்பரும் சமூக ஆர்வலருமான அன்புத் தம்பி குத்தாலம் அஷரஃப் அவர்களைத் தொடர்பு கொண்டு, "சத்தியமார்க்கம்.காம் தளத்துக்காக முனைவரோடு ஒரு பத்துநிமிட நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யமுடியுமா?" என்று கேட்டபோது, "இன்ஷா அல்லாஹ்" என்றார்.

நேர்காணலுக்கு முதல்நாள் நிகழ்ச்சியின் முடிவில், முனைவரைச் சந்தித்து நேரடியாகக் கோரிக்கை வைத்தபோது மகிழ்வுடன் ஒப்புதல் அளித்தார். மறுநாள் 08.05.2010 காலையில் தம்பி அஷ்ரஃபுடன் புறப்பட்டு, முனைவரையும் அழைத்துக் கொண்டு, துபையிலுள்ள 'இஸ்லாமியத் தகவல் மையம்' போய்ச் சேர்ந்தோம். அந்த மைய நூலகத்தின் ஒரு பகுதியில் நேர்காணல் தொடங்கியது. முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் எனது வினாக்களுக்குப் பொறுமையாகவும் சில கட்டங்களில் உணர்ச்சிவசப்பட்டும் விளக்கமளித்தார். அவரது முழுமையான நேர்காணல், இங்குக் காணொளியாக வெளியிடப் பட்டுள்ளது.

"எல்லாவற்றையும் பார்த்துவிடலாம். ஒவ்வொன்றாகக் கேளுங்கள்" என்று முனைவர் அப்துல்லாஹ் கேட்டுக் கொண்டார். அவரது நேர்காணலின் சுருக்கம்:

சத்தியமார்க்கம்.காம்: ஆத்திகராக இருந்து, தம் கவிதையைப் படிப்பதற்காகவே, 'பெரியார்தாசன்' ஆக மாறியது பற்றிச் சொல்லுங்கள்.

பேரா. Dr. அப்துல்லாஹ்: எனது பதினேழாவது வயதில் நான் பச்சையப்பன் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தபோது ஒரு விழாவில் பேசுவதற்காகப் பெரியார் அங்கு வந்திருந்தார். அவரை வாழ்த்தி ஒரு கவிதை எழுதினேன். அந்தக் கவிதையின் அடியிலுள்ள எனது இயற்பெயரை மாற்றிப் போடும்படி என் பேராசிரியர் அறிவுறுத்தியபோது "பெரியார்தாசன்" எனப் போட்டுக் கொண்டேன். அதன் பின்னர் பெரியாரைக் கற்று, அவரது சீர்திருத்தக் கருத்துகளால் கவரப்பட்டு, அவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு, அவரது சீர்திருத்தக் கருத்துகளைப் பல்லாண்டுகள் பிரச்சாரம் செய்தேன். ஒரு 17 வயது இளைஞன், அவனது அப்போதைய அறிவுத்திறனுடனே, சிந்தனையுடனேயே 64 வயதிலும் இருக்க வேண்டும் என்று என்னை யாரும் கட்டாயப் படுத்த முடியாது. ஒரு கம்பளிப் பூச்சியை வண்ணத்துப் பூச்சியாக வளர்ச்சி பெறக்கூடாது என்று யாரும் தடுக்கவியலாது. அறியாமை முடிகள் உதிர்ந்த கம்பளிப் பூச்சியாக, அறிவுச் சிறகுகள் முளைத்த வண்ணத்துப் பூச்சியாக நான் இப்போது மாறிப் போனேன். இது என் சொந்த வளர்ச்சி. இதில் குறைகூற, குற்றம் சாட்ட யாருக்கும் உரிமையில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பொதுவுடமைக்காரரான செஞ்சட்டை பஞ்சாட்சரம் நடத்தி வந்த, 'பெரியார் சமதர்ம இயக்கம்' எனும் அமைப்பில் சேர்ந்து கம்யூனிஸ்டாக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: கம்யூனிஸத்துக்கு நான் போகவில்லை; கம்யூனிஸ்ட்டாக மாறவுமில்லை. கம்யூனிஸம் என்னுடன் எப்போதும் இருக்கிறது; இப்போதும் இருக்கிறது.

சத்தியமார்க்கம்.காம்: புத்த மார்க்கத்தில் போய்ச் சேர்ந்து கொண்டு, 'சித்தார்த்தன்' ஆக மாறியது பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பாபா ஸாஹிப் அம்பேத்கர் எழுதிய 52 பிரிவுகள் அடங்கிய அவரது நூலை மொழி பெயர்த்தபோது, புத்த மதத்தில் அற்புதமான பல கருத்துகள் இருந்ததைப் படித்து, அவற்றால் ஈர்க்கப் பட்டேன். அப்போதும் எனது இறைமறுப்புக் கொள்கை அப்படியேதான் இருந்தது. ஏனெனில் புத்த மதத்தில் இறையென்று ஒன்றில்லை. "அன்பே இறை" என்பதே அதன் அடிப்படைத் தத்துவம். புத்தரின் 2000ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குக் கென்னெத் லேனில் உள்ள புத்தமதத் தலைமையகத்தின் அழைப்பை ஏற்றுக் கொண்டு சென்ற பெரியர், புத்தமதத்தின் கொள்கைகளைப் பாராட்டிப் பேசினார்."புத்தி கொண்டு சிந்திப்பவன் புத்தன்; எனில் நானும் புத்தன்தான்" என்று கூறினார். பெரியார் புத்தானாக இருந்தபோது பெரியார்தாசன் புத்தனாக இருந்ததில் விமர்சனத்துக்கு இடமேயில்லை.

சத்தியமார்க்கம்.காம்: 'தமிழ்ச் சான்றோர் பேரவை' எனும் அமைப்பில் இருந்தபோது, ஆதி சங்கரரின் தத்துவத்தைப் புகழ்ந்து 'நந்தன்' இதழில் எழுதியதைப் பற்றி ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: அது நான் எழுதியதல்ல; ஒரு நேர்காணல். ஆதிசங்கரரைப் புகழ்ந்த குற்றச்சாட்டில் கூடுதலாக விளக்க வேண்டியவை உள்ளன. 'இந்துத் தத்துவம்' என்பது வேறு; இந்தியத் தத்துவம் என்பது வேறு. இந்துத் தத்துவம் என்பது வர்ணாசிரமக் கொள்கையின் அடிப்படையில் மனிதர்களை சாதிவாரியாகக் கூறுபோட்ட பார்ப்பனீயம் ஆகும். இந்தியத் தத்துவம் என்பது சாங்கியம் (கபிலர்), யோகம் (பதஞ்சலி), மீமாம்சம் (ஜெய்மினி), நியாயம் (கோதமர்), வைசேஷிகம் (கணாதர்), வேதாந்தம் (ஆதிசங்கரர்) ஆகியவையாகும். இவற்றை அறுசமயம் என்பர். இந்த ஆறிலும் கடவுள் கொள்கை என்ற ஒன்றே இல்லை. ஆனால், சிலவற்றுள் தவறாக அது புகுத்தப் பட்டது.
ஆதிசங்கரர், தம் ஆசிரியரான கோவிந்த பகவத் என்பவரைப் போற்றிப் பாடிய "பஜகோவிந்தம்" எனும் பாடலை, கோவிந்த'சாமி'க்குப் பாடிய பாட்டாகப் பின்னர் வந்தோர் மாற்றிக் கொண்டனர்.

ஆதிசங்கரரின் பாடல்களுள் அர்த்தமுள்ளவை என நான் குறிப்பிட்ட பாடலை நீங்கள் கேட்டாலும் அவை அர்த்தமுள்ளவைதாம் என ஒப்புக் கொள்வீர்கள். கேட்கலாம், தப்பில்லை: சத் சங்கத்துவே நித் சங்கத்துவம் (அறிஞர்களோடு சேர்ந்திருந்தால் உன் தனித்தன்மை உனக்குத் தெரியவரும்). நித் சங்கத்துவே நிர்மோகத்துவம் (உன் தனித்தன்மை உனக்குப் புரிந்துவிட்டால் ஆசைகள் அற்றுப்போகும்).
நிர்மோகத்துவே நிச்சலத் தத்துவம் (ஆசைகள் அற்றுவிட்டால் மனதில் அமைதி உண்டாகும்).

நிச்சலத் தத்துவே ஜீவன் முக்தி (சலனமற்ற அமைதியான மனநிலையே முக்திநிலை).
ஆதிசங்கரர் போட்டிருக்கும் நாமம் அழகாயிருக்கிறது என்பதற்காகவோ அவர் பார்ப்பனர் என்பதற்காகவோ அவரை நான் புகழவில்லை. அத்துவைதம் போதித்த அவரது கருத்துகள் சில அர்த்தமுள்ளவை எனத் தெரிந்து கொண்டு அவற்றைப் புகழ்ந்து, நந்தன் எனும் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டேன்; அவ்வளவுதான். அந்தக் கருத்துகள் அர்த்தமுள்ளவை என்பதில் இன்றைக்கும் எனக்கு வேறுபட்ட கருத்தில்லை.

சத்தியமார்க்கம்.காம்: தொலைக்காட்சியில் வெளியான தன்னம்பிக்கைக் கருத்தரங்கில் 'கல்ராசி' பற்றிப் பரப்புரை செய்தது ஏன்?

பேரா. Dr. அப்துல்லாஹ்: மனோதத்துவக் கருத்தரங்குகளில் 'கல்ராசி' பற்றியெல்லாம் நான் பரப்புரை செய்யவில்லை. ஏறத்தாழப் பத்தாண்டுகளுக்கு முன்னர், என் நண்பர் ராஜராஜன் என்பவர், தன் இல்ல நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளுமாறு என்னை அழைத்திருந்தார். அப்போது நானும் அவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட நிழற்படத்தை, அவரது 'பெயர்ராசி' விளம்பரத்துக்காகப் பயன் படுத்தியிருக்கிறார் என்பது பிற்பாடு தெரிய வந்தது. மற்றபடி எனக்கும் எந்த ராசிக்கும் எவ்விதத் தொடர்பும் எப்போதும் இருந்ததில்லை.

சத்தியமார்க்கம்.காம்: பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து தொடங்கிய, 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'யைத் தத்தெடுத்துக் கொண்டு, அதன் தலைவராக அறிவித்துக் கொண்ட விபரம் ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: பெரியார் திராவிடர் கழகத்திலிருந்து ஒரு காலகட்டத்தில் நான் வெளியேற்றப் பட்டேன். அதற்கு, நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதைக் காரணமாகச் சொன்னார்கள். என்னுடன் கல்லூரியில் பணியாற்றிய பெண்ணொருவர் என்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினார்; நானும் விரும்பினேன். திருமணம் செய்து கொண்டோம். அந்தத் திருமணம் முடிந்து பத்தாண்டுகளுக்குப் பின்னர் அதைக் காரணமாகச் சொல்லி நான் வெளியேற்றப் பட்டேன். அந்த அநீதியான கேலிக்கூத்தை அன்று யாருமே தட்டிக் கேட்கவில்லை. எனவே, யாராலும் கண்டு கொள்ளப் படாமல் தூசி படிந்து கிடந்த 'தமிழ்நாடு சுயமரியாதை சமதர்மக் கட்சி'க்குப் புத்துயிர் கொடுக்கலாம் என்றெண்ணி அதற்குத் தலைமை ஏற்றேன். பின்னர், ஒரு கட்சியை நடத்துவதெல்லாம் எனக்குக் கைவராது என்று கண்டு கொண்டு, அதில் தீவிரம் காட்டவில்லை. அது வெறும் லெட்டர்பேடு கட்சிதான்.

சத்தியமார்க்கம்.காம்: மேற்கண்ட எல்லாவற்றையும் துறந்து விட்டு, இப்போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம் ஆக மாறிவிட்டிருப்பதுதான் தீவிர விமர்சனமாகியுள்ளது ...

பேரா. Dr. அப்துல்லாஹ்: இஸ்லாத்தை எனது வாழ்வியல் நெறியாக நான் ஏற்றுக் கொண்டது சிலர் கேட்பதுபோல் திடீர் நிகழ்வல்ல; பத்தாண்டுகால மனப் போராட்டத்தின் முடிவு இது. கடவுள் மறுப்பைக் குறித்த மீளாய்வு எனக்குத் தோன்றி வெகுகாலமாகி விட்டது. அதன் எதிரொலியாகக் கல்கி இதழில் 52 வாரம் 'நான் நாத்திகன் இல்லை' எனும் சுய பிரகடனத்தைத் தலைப்பிட்டு எழுதினேன். அத்தொடர் தொடங்கியது 2000ஆம் ஆண்டில். கடவுளைத் தேடிய எனது முயற்சியில் பல மதங்களைப் படித்துப் பார்த்து, இறுதியாக நான் மெய்க்கடவுளைக் கண்டு கொண்டது குர்ஆனில். நான் வெளியில் இருந்தபோது இஸ்லாத்திற்குக் குறைவும் இருந்ததில்லை; இணைந்த பிறது அதற்குத் தனிப் பெருமையும் சேர்ந்துவிடவில்லை. யார் வந்தாலும் வராவிட்டாலும் அது என்றும் வாழும் மார்க்கம். இஸ்லாத்தைத் தேர்ந்தது என் தனிப்பட்ட முடிவு. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் இஸ்லாத்தில் என்னை இணைத்துக் கொண்டது அரசியலுக்குத்தான். இஸ்லாத்தில் எனக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தியாவை உண்மை இஸ்லாம் ஆள வேண்டும் என்ற அரசியல் ஆசை இருக்கிறது. இதை வெளிப்படையாக அறிவிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நன்றி கூறி, பிரார்த்தனையுடன் நேர்காணலை நிறைவு செய்து, பகல் தொழுகையை முடித்துக் கொண்டு பள்ளியை விட்டு வெளியே வந்தபோது, பெரியாரைப் பற்றிப் பேச்சு வந்தது.

"எவ்வளவோ பாடுபட்டும் நம் நாட்டில் சாதிகள் ஒழிந்துவிடவில்லை. சாதி ஒழிப்பை மேடைபோட்டுப் பேசிவிட்டு என் சொந்த ஊருக்குப் போனால், என்னை என் சாதியோடு சேர்த்தே எனது ஊரைச் சேர்ந்தோர் குறிப்பிட்டுப் பேசுவதைக் காதால் கேட்க வேண்டிய நிலை இருந்தது!. இப்போது என் சாதி, என்னை விட்டும் தானாக ஓடிப் போனதே! நம் ஊர்ப்பக்கம் சாதி-சனம் என்று சேர்த்துச் சொல்வார்களல்லவா? சாதியோடு சேர்ந்து கொண்டு என் சனமும் என்னை விட்டு ஒதுங்கிப் போனது. கடந்த பத்து நாட்களுக்குள் எனது குடும்பத்தில் நடந்த ஒரு திருமணத்துக்கு எனக்கு அழைப்பில்லை; ஓர் இறப்புக்கு அறிவிப்பில்லை! இஸ்லாத்தில் இணைவதால் இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எனக்குத் தெரியும். எல்லாவற்றையும் எதிர்பார்த்தே நான் இஸ்லாத்துக்கு வந்தேன்"

"பெரியாரின் மறைவுக்குப் பிறகு கொஞ்சகாலம் சாதியாதிக்கம் அடங்கிக் கிடந்தது. இன்றோ, சங்கங்கள் வளர்க்கும் சாதிகள் என்பதாய்ச் சாதிச் சங்கங்கள் தமிழகத்தில் பெருகிப் போய்விட்டன. சாதி அரசியல் தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் ஆட்சி செய்கிறது". "சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, சமூக சீர்திருத்தம் போன்ற - கடவுள் மறுப்பு தவிர்த்த - பெரியாரின் கொள்கைகள் இன்றும் என்னிடம் உள்ளன. கடவுள் மறுப்புப் பற்றிய எனது மீளாய்வுகூட ஒருவகையில் பெரியாரின் கொள்கை அடிப்படையில் எழுந்ததுதான்" என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் முனைவர் அப்துல்லாஹ்.
"எப்படி?"

மனப் பிறழ்வு, மனக் குழப்பம் ஆகிய உளவியல் சார்ந்த நோய்களுக்கு உரிய ஆலோசனைகளும் மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஆலோசனைகளும் முனைவர் அப்துல்லாஹ் வழங்கி வருகிறார். அணுக வேண்டிய முகவரி:

Prof. Dr. Abdullah (Periyar Dhasan),
109, Mahalakshmi Nagar,
Thiruverkadu, Chennai 600077
Tamilnadu, India
Tel : 044-26801919; Cell : +91-9444146444
Email : vperiyardhasan@yahoo.com எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்

"உயிர்களின் தொடக்கம் குறித்து இருவகை இயல்களே உள. ஒன்றாவது பரிணாமவியல்; இரண்டாவது படைப்பியல். பரிணாமவியலைப் பெரியார் இறுதிவரை ஒப்புக் கொள்ளவில்லை. ஏனெனில், பரிணாமவியலைப் பற்றி அவர் தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தார். எனவே, மறுதலித்தார். படைப்பியலைப் பற்றிக் கவலைப்படாததால் அதையும் மறுத்தார். இரண்டில் ஒன்று இருக்க வேண்டும்; அது உண்மையானதாக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஏனெனில், பரிணாமவியல் தவறென்றால் படைப்பியல் மட்டுமே எஞ்சுகிறது. அந்தச் சிந்தனை என் தேடலாக மாறியது. 'எல்லாவற்றையும் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும்' எனும் முடிவு எனக்கு ஏற்பட்டு வெகு காலமாகி விட்டது. அது தெளிவாகத் தெரிந்தது இறைவேதமான குர்ஆனை ஆய்வு செய்தபோதுதான். அல்ஹம்து லில்லாஹ், எல்லாப் புகழும் இறைவனுக்கே!"

எல்லாப் புகழுக்கும் உரிய வல்ல இறைவன், நமக்கும் அவருக்கும் ஈமானில் உறுதியையும் இறைமறையில் ஈடுபாட்டையும் இறைவழி இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன்-ஹதீஸில் தெளிவையும் அதிகமதிகம் வழங்கியருள வேண்டும்; உண்மை இஸ்லாத்தில் உறுதியுடன் நடைபயில உதவி புரிய வேண்டும்!

- ஜமீல் (அமீரகப் பிரதிநிதி, சத்தியமார்க்கம்.காம்)
http://www.satyamargam.com/prof-dr-abdullah-ex-periyar-dhasans-exclusive-interview

Saturday, May 15, 2010

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்: ஜுமாதல் ஆகிரா

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம்:

ஜுமாதல் ஆகிரா


http://www.mudukulathur.com/religiondetails.asp?id=291


இஸ்லாமிய வரலாற்றில் இந்த ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்.

தாதுஸ்ஸலாசில் யுத்தம்:
மதீனாவிலிருந்து பத்து நாள் நடைதூரத்தில் வாதில்குரா என்ற இடத்திற்கு அருகிலுள்ள பகுதி தான் ’தாதுஸ்ஸலாசில்’ ஆகும். முஃதா யுத்தம் முடிந்தவுடன் ‘குழாஆ’ கிளையினர் முஸ்லிம்களைத் தாக்க தயாராகின்றனர் என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்கு தெரியவரவே, அம்ரு இப்னு ஆஸ்(ரழி) அவர்களின் தலைமையில் 300 படை வீரர்களுடன் ஒரு படையை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். எதிரிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் விபரத்தை அம்ரு(ரழி) அவர்கள் நாயகத்திற்கு தெரிவித்தார்கள். உடனே நபியவர்கள் அபூஉபைதா(ரழி) அவர்களின் தலைமையில் மேலும் 200 படை வீரர்களை உதவிக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படை வீரர்களில் அபூபக்கர்(ரழி), உமர்(ரழி) அவர்களும் இருந்தார்கள்.இஸ்லாமியப்படை எதிரிப்படையினரை தாக்கி சிதறடிக்கச் செய்து விட்டு வெற்றியோடு மதீனா திரும்பினார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நிகழ்ந்தது.

ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) படைப்பிரிவு:
ரோம் நாட்டு மன்னர் கைஸருக்கு நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய அழைப்பு கடிதம் எழுதி திஹ்யா இப்னு கலீஃபதுல் கல்பீ(ரழி) என்ற தோழரிடம் கொடுத்தனுப்பினார்கள். அக்கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மன்னர் கைஸர்,நாயகத்தின் தூதுவராக வந்த திஹ்யா(ரழி) அவர்களை கண்ணியப்படுத்தி உயர்ரக ஆடைகள் அன்பளிப்புகள் கொடுத்து அனுப்பி வைத்தார். மதீனா வரும் வழியில் ‘ஹிஸ்மா’ என்ற இடத்தில் ஜுதாம் கிளையைச் சேர்ந்த சிலர் திஹ்யா(ரழி) அவர்களைத் தாக்கி அவருடைய பொருட்களை
வழிப்பறி செய்து கொண்டனர். திஹ்யா(ரழி) அவர்கள் மதீனா வந்து சேர்ந்ததும் நாயகத்திடம் வரும் வழியில் வழிப்பறி செய்யப்பட்ட விபரத்தை கூறினார். உடனே நபியவர்கள் ஜைது இப்னு ஹாரிஸா(ரழி) அவர்களின் தலைமையில் 500 பேர் கொண்ட படையை ஹிஸ்மா பகுதிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்நிகழ்வு ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு இதே மாதத்தில் நிகழ்ந்தது.

அலி இப்னு அபூதாலிப்(ரழி) படைப்பிரிவு:
இதே மாதத்தில் ‘ஃபதக்’ என்ற பகுதியில் வசிக்கும் பனு ஸஃது இப்னு பக்ர் கிளையினரிடம், அலி இப்னு அபூதாலிப்(ரழி) அவர்களின் தலைமையில் ஒரு படைப்பிரிவை நபி(ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

துல் உஷைரா யுத்தம்:
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு ஜுமாதல் ஆகிரா மாதத்தில் நபி(ஸல்) அவர்கள் 200 தோழர்களுடன் இப்போருக்கு புறப்பட்டார்கள். மக்காவிலிருந்து வியாபாரப் பொருட்களுடன் ’ஷாம்’ நாடு நோக்கிச் சென்று கொண்டிருந்த குரைஷிகளின் வியாபாரக் கூட்டத்தைத் தாக்கி அவர்களுக்கு பொருளாதாரச் சேதத்தை
உண்டாக்குவதே நபியவர்களின் நோக்கம். ஆனால் நபியவர்களின் படை ’துல் உஷைரா’ என்ற இடத்திற்கு வரும் முன்பே, குரைஷிகளின் வியாபாரக்கூட்டம் அவ்விடத்தை கடந்து சென்று விட்டார்கள் என்ற விபரம் தெரியவந்தது. எனவே யுத்தமின்றி இஸ்லாமியப் படைகள் மதீனா திரும்பினார்கள்.
பின்னர் குரைஷிகளின் இதே வியாபரக்கூட்டம் ஷாமிலிருந்து மக்கா திரும்பி வரும் சமயம், அவர்களைத் தாக்கச் சென்ற போது தான் “பத்ரு யுத்தம்” நடைபெற்றது.

தூகரத் யுத்தம்:
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபிய்யா ஒப்பந்தத்திற்கு பின் இந்த யுத்தம் நிகழ்ந்தது. நபி(ஸல்) அவர்களின் ஒட்டகங்களை மேய்க்கச்சென்றவரை ஃபஸாரா கிளையைச் சேர்ந்த அப்துர்ரஹ்மான் என்பவன் கொன்று விட்டு ஒட்டகங்களை ஓட்டிச்சென்று விட்டதால் ஏற்பட்டது இந்த யுத்தம். இப்போரில் முக்கிய வீரராக இருந்தவர் ஸலமா இப்னு அக்வா(ரழி) அவர்கள். இப்போரிலும் இஸ்லாமியப் படையினருக்கே வெற்றி கிடைத்தது. இந்த யுத்ததிலும் நபி(ஸல்) அவர்கள் ”ஸலாத்துல் கவ்ஃ” என்னும் அச்ச நேரத்தொழுகையை தொழுக வைத்தார்கள்.

கலீஃபா அபூபக்கர்(ரழி) அவர்களின் வஃபாத்:
ஹிஜ்ரி 13ஆம் ஆண்டு, ஜுமாதல் ஆகிரா மாதம் (கி.பி. 634 ஆகஸ்டு மாதம்) இஸ்லாமியப் பேரரசின் முதல் கலீஃபா அபூபக்கர் சித்தீக்(ரழி) அவர்கள் தங்களின் 63-வது வயதில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார்கள். அவர்கள் இரண்டு வருடம், மூன்று மாதம், பத்து நாட்கள் கலீஃபாவாக சிறப்பாக பணியற்றியுள்ளார்கள்.

உமர்(ரழி) அவர்களிடம் உடண்படிக்கை:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா 22ஆம் நாள் மக்கள் உமர்(ரழி) அவர்களை, இரண்டாம் கலீஃபாவாக ஆக்கி உடண்படிக்கை செய்தார்கள்.

யர்மூக் யுத்தம்:
ஹிஜ்ரி 13, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் ரோம் நாட்டுப்படையினருக்கும் இஸ்லாமியப் படையினருக்கும் யர்மூக் என்னும் இடத்தில் நிகழ்ந்த பெரிய யுத்தம். ஒரு லட்சத்திற்கும் அதிகமான
ரோம் நாட்டு எதிரிப்படையுடன், 30,000 பேர் கொண்ட இஸ்லாமியப் படையினர் போரிட்டு வெற்றி பெற்றார்கள். இஸ்லாமியப் படையை காலித் இப்னு வலீத்(ரழி), அபூஉபைதா இப்னு ஜர்ராஹ்(ரழி) ஆகிய
முக்கிய தளபதிகள் வழிநடத்திச் சென்று வெற்றி வாகை சூடினார்கள்.
(இப்போர் ஹிஜ்ரி 15ஆம் ஆண்டு ரஜப் மாதத்தில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.)

ஜமல் யுத்தம்:
ஹிஜ்ரி 36, ஜுமாதல் ஆகிரா மாதத்தில் அலி(ரழி) அவர்களின் ஆதரவாளர்களுக்கும், உஸ்மான்(ரழி) அவர்களின் கொலைக்குப் பழி வாங்க கோரியவர்களுக்கும் மத்தியில், ஈராக்கில் உள்ள பஸரா நகருக்கு வெளியில் நடைபெற்ற போர். இருதரப்பிலும் இஸ்லாமியர்களே மோதிக்கொண்ட துயரமான நிகழ்ச்சி இப்போரில் ஏற்பட்டது. (ஜுமாதல் ஊலா மாதத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.)

தொகுப்பு: மவ்லவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி துபாய். (055 9764994)

Tuesday, May 11, 2010

கொஞ்சம் துறவு...

கொஞ்சம் துறவு...
அப்துல் அஜீஸ் பாகவி


[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இந்த
உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலை
நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும்
என்று எதிர்பார்க்காதே!
ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையை கருத்தில் கொண்டு
நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு வாழ்ந்து கொள்.
இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால்
பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது.

அதே நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக துறவு
பூண்டு விடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற
நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி
அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான்.]
''ஆடம்பரமாக வாழாதீர்கள். அதீத செலவினத்தை தவிருங்கள்' என்று சொன்னவர்
யார்?'' ஓரு வார இதழில் இப்படி ஒரு புதிர் போடப் பட்டிருந்தது. பதிலை
தேர்ந்தெடுக்க வசதியாக நான்கு பெயர்களை குறிப்பிடிருந்தார்கள்.
தாயுமானவர், புத்தர், நபிகள் நாயகம், மன்மோகன் சிங். என்ற அந்த நான்கு
பெயர்களையும் படித்து விட்டு நான் நபிகள் நாயகம் என்பதை தேர்வு செய்தேன்.
அது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள அந்த பத்திரிகையை தலைகீழாக
திருப்பி சரியான விடைகளை பார்வையிட்ட போது அங்கே, ஒரு ஆச்சரியம்
காத்திருந்தது. விடை நான் நினைத்தது இல்லை. இதைச் சொன்னவர் இந்தியப்
பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்.

ஒரு அரசியல் வாதி தேர்ந்த ஒரு மதகுருவைப் போல நாட்டு மக்களுக்கு உபதேசம்
செய்வது, அதுவும் சமயம் மதம் என்பதெல்லாம் ஒரு அலங்காரத்திற்கு வைத்துக்
கொள்ளத்தக்கது அவ்வளவுதான் என்ற எண்ணம் மோலோங்கியிருக்கிற காலத்தில்
இப்படி ஒரு அறிவுறையை சொல்லியிருப்பது ஒரு ஆச்சரியம் தானே?

நமது பிரதமர், அதுவும் முதலாளித்துவ மனோபாவம் கொண்ட ஒரு பொருளாதார
நிபுணர், திடீரென ஒரு மதகுருவின் குரலில் பேச வேண்டிய அவசியம் என்ன
நேர்ந்த்தது? வேறோன்றும் இல்லை!

ஒரு பக்கம் இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. மற்றொருபுறம்
அதன் வாங்கும் திறன் குறைந்த்திருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில்
இப்போது ஒரு வித்தியாசமான சூழல் நிலவுகிறது.இந்தியப் பொருளாதாரம்
வளர்ச்சி நிலையில் இருக்கிறது. முன்பு ஒரு அமெரிக்க டாலரைப் பெருவதற்கு
50 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. இப்போது 46 ரூபாயுக்கு ஒரு டாலரை
வாங்க முடியும். அந்த வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு
உயர்ந்திருக்கிறது.

இதன் பலன் நாட்டு மக்களுகுகு கிடைத்திருக்கும் என்றால் முன்னர் ஒரு
ரூபாயுக்கு கிடைத்த சாக்லேட் 90 காசுக்கு கிடைக்க வேண்டும் ஆனால் நிலமை
வேறு மாதியிருக்கிறது. ஒரு ரூபாய் சாக்லெட் இபோது ஒண்ணரை ரூபாயாக
ஆகிவிட்டது. 60 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எண்ணை 90 ரூபாயாகிவிட்டது. 36
ரூபாய்க்கு கிடைத்து வந்த துறையூர் அரிசி இப்போது 41 ரூபாயாகிவிட்டது.
இரும்பு விலை 56 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
கம்ப்யூட்டர் மற்றும் ஐ.டி துறையின் வளர்ச்சியால் கார் பங்களா என வாழ்கை
வசதிகள் பெருகி.. இலட்சக் கணக்கினாலான பணம் சாமாண்ய நடுத்தர வர்கத்து
மக்களிடம் புரள.. சிற்றூர்களிலும் கூட ஷாப்பிங் மால்களும் உயர் ரக காப்பி
ஷாப்புகள் மிளிரஸநாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுள்ளதை மக்கள்
தங்களது வாழ்வியல் போங்கில் அனுபவித்து உணர்ந்து கொண்டிருந்த சூழலில்
இந்த பணவீக்கம் ஒரு திடீர் அதிர்ச்சியையும் எச்சரிக்கையையும்
ஏற்படுத்தியிருக்கிறது அந்த எச்சரிக்கைதான் டாக்டர் மன்மோகன் சிங்
அவர்களை இப்படி பேச வைத்திருக்கிறது.

ஒரு துறவியை போல அவர் பேசுகிறார் என்று சிலர் நையாண்டி செய்கிறார்கள்.
உண்மை தான். ஆனால் இந்தத் துறவு இன்றைய இந்திய தேசத்தின் தேவை என்பதை
நாட்டு மக்கள் உணர வேண்டும்.

இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு புதிய வகை பணக்கார வர்க்கம் வேகமாக
வளர்ந்து வருகிறது. அதிக சிரமம் அல்லது துணிச்சலான முயற்சி எதையும்
மேற்கொள்ளாமலே ஒரு கனிசமான தொகையினர் பெரும் செல்வந்தர்களாகி வருகினறனர்.
குறிப்பாக இளைஞர்களும் இளைஞிகளும் கல்வித்தகுதி ஒன்றை மட்டுமே மூலதனமாக
கொண்டு பெரும் பொருள் ஈட்டிவருகினறனர். அவர்களிடம் ஆடம்பர மோகம் அதிகமாக
இருக்கிறது. 5 ரூபாய்க்கு கிடைக்கிற காப்பியை தவிர்த்துவிட்டு 50
ரூபாயுக்கு காப்பி குடிப்பதை தேர்வு செய்கின்றனர். ஒரு பகுதியில் இத்தகைய
வாடிக்கையாளர்கள் பெருகுகிற போது அந்தப் பகுதியில் காப்பியின் விலை
கனிசமாக உயர்ந்து விடுகிறது. சாதாரண பெட்டிக் கடை வைத்திருப்பவ்ர் கூட
சில பிளக்ஸ் அட்டைகளையும் கண்ணாடி அலங்காரங்களையும் செய்வதன் மூலம்
இரண்டைரை ரூபாய் டீயை 10 ரூபாய்க்கு விற்கிறார். அதைப் பற்றி யாரும்
கேட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நான் துபாய் சென்றிருந்த போது ஒரு நாள் டீ கடைக் காரர் இன்று முதல்
டீயின் விலை 6 திர்ஹம் என்றார். உடன் வந்த நண்பர் கடைக்காரரிடம்
எதற்கப்பா இந்த விளையாட்டு இன்னும் ஓரிரு நாளில் நீயே விலையை குறைத்து
விடுவாய் என்றார். இல்லை. இல்லை. இந்த முறை விலை குறைக்கப் படாது என்றார்
கடைக்காரர். பார்க்கலாம் என்று சொல்லி விட்டு நண்பர் திரும்பினார். என்ன
விசயம் என்று நான் நண்பரைக் கேட்டேன். இங்கு அவ்வப் போது டீ
கடைக்காரர்கள் இப்படி டீ விலையை உயர்த்துவார்கள். இங்குள்ள உழைக்கும்
மக்கள் தான் இது போன்ற கடைகளில் டீ குடிப்பார்கள். அவர்களுக்கு டீ ஒரு
திர்ஹம் என்பது பெரிய தொகை. அதனால் டீ விலையேற்றத்தை ஏற்றுக் கொள்ள
மாட்டார்கள். டீ குடிப்பதை குறைத்து கொள்வார்கள்.

வியாபாரம் குறைவதைப் பார்த்து கடைக்காரர்கள் மீண்டும் பழைய விலைக்கே
விற்க ஆரம்பித்து விடுவார்கள். இது இங்கு அவ்வப் போது நடக்கிற நாடகம்
தான் என்று நண்பர் சொன்னார். துபாயின் டீ விலையை போல இல்லாமல் நமது
நாட்டில் ஒரு பொருளுக்கு விலையேரிவிட்டால் பிறகு அது இறங்குவதே இல்லை,
இந்தியாவில் பெருகி வரும் ஆடம்பர மோகத்தால் உயர்கிற பொருட்களின் விலை,
ஆடம்பரக்கடைகளை தொடர்ந்து சாமாண்யக் கடைகளையும் தொற்றுகிறது.

சென்னையில் ஒரு சைவ ஹோட்டலில் மதிய சாப்பாடு 225 ரூபாய். இதற்கும் அது
ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டல் அல்ல. சற்று வித்தியாசமாக்கப்பட்டுள்ள ஒரு
ரெஸ்ட்டாரெண்ட் அவ்வளவே! ஆனாலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பெயரைப்
பதிவு செய்துவிட்டு வரிசையில் காத்திருந்து சாப்பிடுகிறார்கள்.

இந்தப் புதிய ஆடம்பரக் கலாச்சாரம் ஒவோர் விசயத்திலும் தொடர்கிறது. அது
பொருட்களின் விலை உயர்வுக்கு காரண்மாகிறது. இந்தியாவ்லும் சீனாவிலும்
இத்தகை ஆடம்பரக் கலாச்சாரத்திற்கு புதிதாக ஆட்பட்டோரின் எண்ணிக்கை
பெருகிவிட்ட காரணத்தினால் தான் உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை
உயர்ந்து விட்டதாக வெள்ளை மாளிகை உணவு அறிக்கையை வெளியிட்டது. ஒரு பெரிய
பொருப்பில் இருக்கும் ஆட்சித் தலைவர் ஒருவர் சம்பந்தமில்லாமல் ஒரு
காரணத்தை சொல்ல முடியாது. அதிலும் குறிப்பாக பொருளாத விசயத்தில். எனவே
அமெரிக்க அதிபர் கூறும் காரணம் புறக்கணித்தக்க ஒன்றல்ல. அதனால் தான்
டாக்டர் மன்மோகன் சிங் அமெரிக்க அதிபரின் குரலை, வெளியுலகம் சற்றென்று
புரிந்து கொள்ள முடியாத வாறு சற்று மாற்றி, குற்ற்ம் சாட்டாமல்
அறிவுரையாக கூறியுள்ளார். ஆடம்பரமாக வாழாதீர்கள்.

இந்த அறிவுரை முஸ்லிம்களுக்கு புதிதல்ல.

இஸ்லாமின் பொருளாதார வழிகாட்டுதலில் இந்த இரண்டு அறிவுரைகளும் பிரதானமானவை.

இஸ்லாம் முஸ்லிம்களிக்கு கற்றுக் கொடுக்கிற பண்புகளில் ஜுஹ்து என்ற துறவு
மனப்பான்மை பிரதானமானது. வீடுவாசலைத் துறந்து காட்டிலே கடுந்தவம்
புரிபவர்களிடம் மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனிடமும் இந்த ஜிஹ்து துறவு
மனப்பான்மை இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. ஒரு மனிதர் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இறைவனும் மக்களும் என்னை நேசிக்க
வேண்டுமெனில் நான் என்ன செய்ய வேண்டும் என்றுகேட்டார். நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் சொன்னார்கள். துறவு கொள் இறைவனும் மக்களும் உன்னை
நேசிப்பார்கள் என்று பதிலளித்தார்கள். (இப்னுமாஜா)

துறவு என்ற வார்த்தைக்கு உலகில் பிரதானமாக அறியப்படுகிற பொருள் ஒன்று உண்டு.

பஞ்சு மெத்தையில் படுக்காமல் கட்டாந்தரையில் படுப்பது துறவு. வண்ணவண்ணமான
ஆடைகளை அணியாமல் ஒரு குறிப்பிட்ட வகை ஆடை அணிவது துறவு. ருசி ருசியாண
உணவுகளை உண்ணாமல் ருசிகளற்ற உணவை உணப்து துறவு. சம்பத்திக்கச் செல்லாமல்
பிச்சை எடுத்து உண்பது துறவு,குடும்பமாக வாழமல் தனிமனிதனாக வாழ்வது துறவு
என்று துறவுக்கு உலகம் ஒரு பொருளை கொண்டிருக்கிறது. அந்தப் பொருள் இறை
வேதங்கள் எதுவும் கொடுத்த பொருள் அல்ல. சில போலி சம்ய வாதிகள் மக்களிடம்
அனுதாபத்தையும் தனி மரியாதையையும் பெறுவதற்காக தாங்களே உருவாக்கிக்
கொண்டதாகும். திருக்குரான் இந்த உண்மையை பிட்டு வைக்கிறது.

உன்மையில் வேதங்கள் கற்றுக் கொடுக்கும் துறவு இதுவல்ல. உண்மையன சமயத்
தத்துவங்கள் கூறும் துறவு என்ன என்பதை இஸ்லாம் வெளிப்படுத்துகிறது. இந்த
உலகில் காணப் படும் நல்ல இன்பங்களை அனுபவித்துக் கொண்டு அதில் எல்லை
மீறாமல் நடந்து கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கற்றுத்தருகிற துறவு
மன்ப்பான்மையாகும். ஏ.சி அறையில் தண்ணீர்ப் படுக்கையில் படுத்திருக்கும்
ஒருவர் இது இறைவன் தனக்கு கொடுத்திருக்கும் அருள். இறைவன் நாடிவிட்டால்
இது என்னிடமிருந்து நாளைக்கே பறிக்கப் படலாம் என்ற உணர்வை உள்ளத்திலே
கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வாரானால் அவரும் துறவிதான்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், இந்த
உலகில் ஒரு வழிப்போக்கனைப் போல நடந்து கொள். காலையில் விடியும் போது மாலை
நிச்சயம் வரும் என்று எதிர்பார்க்காதே! மாலை மங்கும் போது காலை புலரும்
என்று எதிர்பார்க்காதே! ஆரோக்கியம் இருக்கிற போதே நோய்க்காலத்தின் தேவையை
கருத்தில் கொண்டு நடந்து கொள். வாழ்கிற போது மரணத்தினை கருத்தில் கொண்டு
வாழ்ந்து கொள்.

இந்த மனப்பான்மையை உள்ளத்தில் தகுந்த இடத்தில் உட்கார வைத்து விட்டால்
பிறகு துறவுக்காக அவசியத் தேவைகள் எதையும் துறக்க வேண்டியிருக்காது. அதே
நேரத்தில் அநாவசியமான, அத்துமீறிய செயல்கள் அனைத்தும் தானாக
துறவுபூண்டுவிடும். ஒரு திருமணத்திற்காக 10 கோடி செலவழிக்க முடியும் என்ற
நிலையில் உள்ள ஒரு செல்வந்தர் சில லட்சங்களில் விரயம் இன்றி
அத்திருமணத்தை முடித்துவிடுவாரானால் அவரும் ஒரு துறவி தான்.

எந்த ஒரு இடத்திலும் தேவைக்கு அதிகமாக செலவழிப்பது
ஆடம்பரமாகும்.ஆடம்பரத்தை தவிர்த்துக் கொள்ளும் ஒவ்வொருவரும் துறவிதான்.
ஆடம்பரம் இஸ்லாம் பெரிதும் வெறுக்கிற விஷயம். ஆற்றின் கரையிலிருந்து
முகம் கழுவுகிற போது கூட தேவைக்கு அதிகமாக தண்ணீரை உபயோகிப்பதை இஸ்லாம்
தடுக்கிறது.

தேவயானதை தேவையான விதத்தில் சாப்பிடவும் பருகவும் அனுமதிக்கிற
திருக்குர்ஆன் விரயம் செய்துவிடாதீர்கள் என்று எச்சரிக்கிறது.

விரயம் செய்பவர்களை இறைவன் விரும்புவதில்லை என்று திருக்குர்ஆன் பல
இடத்திலும் திரும்பத்திரும்பக் கூறுகிறது.

இறைவனது விருப்பம் சாரத எதிலும் நன்மை இருக்க முடியாது. ஒவ்வொரு
தனிமனிதனும் யோசிக்க வேண்டிய விசயம் இது.

தனிப்பட்ட வாழ்வில், விழாக்களில், பெருமைக்காக செய்யப் படுகிற
ஆடம்பரங்களில் பெரிதாக எந்த நன்மையும் ஏற்படுவதில்லை.

ஒரு திருமண விழாவில் வாரியிறைக்கப்படுக்ற ஆடம்பரச் செலவுகளால் அந்த
மணமக்களின் வாழ்வில் மகிழ்சி கூடிவிடப் போவதில்லை.

ஆடம்பரத்தால் நல்ல வாழ்கை தந்துவிடமுடியுமென்றால் இங்கிலாந்தின் இளவரசர்
சார்லஸூம் டயானாவும் பிரிந்திருக்கவே முடியாது, எனென்றால் 20 ம்
நூற்றாண்டின் மிக ஆடம்பரமாக நடைபெற்ற திருமணம் அது,

ஆடம்பரமாக வாழாதீர்கள் அது இறைவனது விருப்பத்திற்குரியது அல்ல எனபது
இதுவரை சமயவாதமாக இருந்தது. இப்போதோ ஆடம்பரமாக வாழாதீர்கள் ஆடம்பரத்தால்
உலகில் விலைவாசி உயரும், ஒரு சிலர் செய்கிற ஆடமபரம் ஒட்டு மொத்த உலகின்
நலனையும் பாதிப்புக்குள்ளாகும் என்பது பொருளாதார தத்துவமாக
மாறியிருக்கிறது இருக்கிறது.

டாக்டர் மன்மோகன் சிங்கின் இரண்டாவது அறிவுரை அதீத செலவினத்தை தவிருங்கள்
என்பது. அதாவது கண்ணில் கண்டதை எல்லாம் வாங்கிக் குவிக்காதீர்கள்
என்கிறார். முன்பெல்லாம் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் வீட்டுக்கு
என்ன தேவை என்பதை எழுதி எடுத்துக் கொண்டு போய் கடைகளைஇல் வாங்கி
வருவார்கள். இப்போதை ஷாப்பிங் மால் கலாச்சாரத்தில் கண்ணில் தெரிவதை
எல்லாம் வாங்கிக் குவிக்கிற பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு
ஷாப்பிங்கின் போதும் ஒரு புதிய பொருள் வீட்டுக்கு வருகிறது, இது
தேவையானது தானா எனபது சரியாக யோசிக்கப் படுவதில்லை. கவர்ச்சியான
விளம்பரங்கள் அல்லது இலவசங்களின் தாக்கம் அந்த யோசனையைத்
தடுத்துவிடுகிறது. இதுவும் விலைவாசி உயர்வுக்கு ஒரு முக்கியக் காரணம்
என்கிறார் மன்மோகன்சிங்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு வீட்டில் எத்தனை
படுக்கைகள் இருக்கலாம் என்பதை சொல்லுகிற போது. குடும்பத் தலைவருக்கு ஒரு
படுக்கை, அவரது மனைவிக்கு ஒரு படுக்கை. விருந்தாளிக்கு ஒரு படுக்கை
இருக்காலம். (தேவையற்று இருக்கும்) நான்காவது படுக்கை சாத்தானுக்குரியது
என்றார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்)
தேவையற்றைத வாங்கிக் குவிப்பதை சாத்தானிய குணம் என சம்யங்கள் வர்ணித்தன.
அதையே விலைவாசி உயர்வுக்கான மற்றொரு காரணம் என இப்போது டாக்டர் மன்மோகன்
சிங் கூறுகிறார்.

ஒருவர் தேவையின்றி ஒரு பொருளை வாங்கினால் அது அவருடைய பர்ஸை மட்டும்
பாதிக்கிற விசயமல்ல. நாட்டுப் பொருளாதாரத்தின் பல்ஸையும் பாதிக்கிறது
என்று கவலைப் படுகிறார் டாக்டர் மன்மோகன் சிங்.

இப்போதைக்கு பிரதமர் துறவியாகியிருக்கிறார். நீங்களும் கொஞ்சம் துறவியாக
முயறிசி செய்யுங்கள். இந்த தேசமும் ''அந்த'' தேசமும் வளம் பெறும்.
அடுத்த முறை உங்களது பர்ஸை திறக்கிறபோது. இந்த ஈமானியத் துறவு முதலில்
தலையை காட்டடும்.

Jazaaakallaahu khairan'' சிந்தனை சரம்